Saturday, March 10, 2012

இலங்கைப் போர்க்குற்றத்துக்கு எதிரான பன்னாட்டு விசாரணையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றங்களை சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை அமைத்து விசாரணை நடத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

இரண்டரை ஆண்டுக்காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை இனவெறி அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், அப்படிப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு எதிர்ப்புக் காட்டுவது வியப்பாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

ரங்கராஜனின் கருத்துக்கள் அனைத்தும் தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதாக இருப்பது மட்டுமின்றி, மார்க்சியக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவும் இருப்பது வேதனையானது. தமிழின எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடிக்கும் சிங்கள இனவாதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, ஒரு தமிழின விரோதக் கட்சி என்பதையும், அது உண்மையான மார்க்சியக் கட்சி அல்ல என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

எனவே இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைப்போல் மார்க்சிஸ்ட் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.